பிரான்சில் முதல் எபோலா நோயாளி பதிவு.. காங்கோவில் பரவும் கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
காங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளார். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவலின்படி, காங்கோவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட உடனேயே அவர் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக காங்கோவில் பணியாற்றிய அமெரிக்க மருத்துவர் ஒருவருக்கும் எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா பரவல் பதிவாகியுள்ளது. அங்கு இதுவரை 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன.
