போர் நிறுத்தம்? ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைத்தார் ட்ரம்ப்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் "மிகச்சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான" கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால பகைமைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் தீர்ப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னதாக, உலக நாடுகளின் எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) 48 மணி நேரத்திற்குள் ஈரான் திறக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அந்நாட்டின் மின் உற்பத்தி கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஈரானின் பதில் நடவடிக்கைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்காவிற்குள் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ள சூழலில், இந்தத் தாக்குதல் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் சென்றால் மட்டுமே இந்த அமைதி நீடிக்கும் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிபர் ட்ரம்ப் தரப்பில் இருந்து இவ்வளவு சாதகமான தகவல்கள் வெளியான போதிலும், ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரானின் மௌனம் சர்வதேச அரசியல் நோக்கர்களிடையே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என ட்ரம்ப் கூறினாலும், மறுபுறம் இஸ்ரேல் தனது தரைப்படைத் தாக்குதலுக்குத் தயாராகி வருவது இப்பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையையே காட்டுகிறது. வரும் ஐந்து நாட்கள் மத்திய கிழக்கின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காலக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
