"ஈரானின் தலைமை முடிந்துவிட்டது!" - கடற்படை, விமானப்படை அனைத்தும் காலி! டிரம்ப்பின் அதிரடிப் பேச்சு!

"ஈரானின் தலைமை முடிந்துவிட்டது!" - கடற்படை, விமானப்படை அனைத்தும் காலி! டிரம்ப்பின் அதிரடிப் பேச்சு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் நான்கு வாரங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு முக்கிய திருப்பமாக 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு அவர் ஆணையிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே "ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறினாலும், ஈரான் தரப்போ அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதனையும் தாங்கள் நடத்தவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள டிரம்ப்பின் உரையில், ஈரானின் ராணுவ பலம் குறித்து அவர் முன்வைத்துள்ள தகவல்கள் உலக நாடுகளை அதிரச் செய்துள்ளன. "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வெளிநாட்டு கடற்படை இந்த அளவிற்குத் தகர்க்கப்பட்டது இதுவே முதல் முறை. ஈரானின் கடற்படை முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. 

அவர்களின் விமானப் படையும், விமானங்களை எதிர்த்துத் தாக்கும் ஏவுகணைச் சாதனங்களும் (Air Defense Systems) செயலிழந்துவிட்டன" என டிரம்ப் தெரிவித்துள்ளார். பி-2 ரக குண்டுவீச்சு விமானங்களைக் கொண்டு நடத்திய தாக்குதல்கள் மூலம் ஈரானின் அணுசக்தித் திறன்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் முதல் மட்டத் தலைவர்கள் (Top Leadership) அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக டிரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். "அவர்களின் தலைமை முடிந்துவிட்டது; தற்போது அவர்கள் புதிய மட்டத்திலான தலைமையை உருவாக்கும் கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்; ஆனால் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போலச் செயல்பட்டனர்" என அவர் விமர்சித்துள்ளார். 

மேலும், இந்தப் போரில் தங்களுக்குத் துணையாக வராத நேட்டோ (NATO) நாடுகள் மீது தனது கடுமையான அதிருப்தியை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். "நாங்கள் அவர்களைப் பாதுகாக்க ஓடினோம், ஆனால் எங்களுக்காக அவர்கள் ஒருபோதும் வரவில்லை" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.