ரன் எடுக்க திணறும் அபிஷேக் சர்மா... இப்படி செய்யுங்க... சுனில் கவாஸ்கர் கொடுத்த அறிவுரை... சரியா வருமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ரன் எடுக்க திணறும் அபிஷேக் சர்மா... இப்படி செய்யுங்க... சுனில் கவாஸ்கர் கொடுத்த அறிவுரை... சரியா வருமா?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான Abhishek Sharma, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவில் செயல்பட முடியாமல் தவித்து வருகிறார். உடல்நலக் குறைவு காரணமாக ஒரு போட்டியில் விளையாடாத அவர், பிற மூன்று போட்டிகளிலும் டக்-அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அவரின் கருத்துப்படி, அபிஷேக் மிகுந்த திறமை கொண்ட வீரர். ஆனால் அதிக எதிர்பார்ப்பு அவருக்கு தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி இருக்கலாம். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தால், தற்போதைய நிலைமை மாறியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அபிஷேக்கிடம் பலவிதமான ஷாட்கள் ஆடும் திறன் இருப்பதால், ஆரம்பத்தில் அவசரப்படாமல் களத்தில் சற்று நேரம் செலவிட வேண்டும் என்று கவாஸ்கர் கூறினார். இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், நல்ல பந்து வந்தால் மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலில் ஒரு ரன் எடுத்து கணக்கை தொடங்குவது மிகவும் முக்கியம். அதற்காக சில பந்துகள் எடுத்தாலும் பரவாயில்லை. தொடக்கத்தில் அமைதியாக நின்று, ஒரு அல்லது இரண்டு ஓவர்களுக்கு பிறகு தன் இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என கவாஸ்கர் அறிவுறுத்தினார். “முதல் ரன் கிடைத்துவிட்டால், அதன் பிறகு அனைத்தும் சரியாக அமையும்” என்பதே அவரது முக்கியமான கருத்தாகும்.