சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிளெமிங் விலகிய பின் ஆலோசகர் பதவிக்கு வாய்ப்பு என தகவல்
சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதிலும் தோனி முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, அணியின் எதிர்கால திட்டங்களில் எம்.எஸ். தோனி முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஐபிஎல் தொடரை முன்னிட்டு, தோனி அணியின் ஆலோசகர் (Mentor) பொறுப்பில் நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த புதிய பொறுப்பின் மூலம், அணியின் கிரிக்கெட் தொடர்பான முக்கிய முடிவுகள், வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் தோனிக்கு முக்கிய பங்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு போட்டியிலும் விளையாடாத தோனி, 45 வயதை கடந்துள்ள நிலையில் வீரராக மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நிர்வாகப் பொறுப்பில் அவரது அனுபவத்தை பயன்படுத்த சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது லண்டனில் இருக்கும் தோனி, இந்தியா–இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை பர்மிங்காமில் நேரில் கண்டுகளித்தார். அதேவேளை, இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred தொடரில் பணியாற்றும் சில பயிற்சியாளர்களையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஒருவரே சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
புதிய பயிற்சியாளர் பதவிக்கான பெயர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானியின் பெயரும் அடிக்கடி பேசப்படுகிறது. பல்வேறு டி20 லீக் தொடர்களில் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்த அனுபவம் அவருக்கு இருந்தாலும், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லாததால், அவரது நியமனம் குறித்து ரசிகர்களிடையே கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
மற்றொரு பக்கம், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அவர் எந்த அணியுடனும் இணைந்து செயல்படவில்லை. இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் இருந்த பழைய தொடர்பு ஆகியவை, சிஎஸ்கேவுடன் அவர் இணைய வாய்ப்பை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
எனினும், சிஎஸ்கே நிர்வாகம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. புதிய பயிற்சியாளர் யார்? தோனிக்கு உண்மையிலேயே ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.