ஈரான் போர் எதிரொலி: அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு.. டிரம்ப் மீது அதிகரிக்கும் அதிருப்தி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. ஆரம்பகட்டத்தில் அமெரிக்க படைகள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டன. இதற்கு பதிலடி கொடுத்த ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டது.
இந்த போர் அமெரிக்காவுக்கு தேவையற்ற பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டு மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்குள்ளும் இந்த போருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன. போர் காரணமாக அரசின் செலவுகள் அதிகரித்ததுடன், மக்கள் மத்தியில் டிரம்பின் செல்வாக்கும் குறைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போரின் தாக்கம் தற்போது அமெரிக்க பொருளாதாரத்திலும் தெளிவாக எதிரொலிக்கிறது. குறிப்பாக வாகன எரிபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. ஒரு கேலன் எரிபொருளின் விலை சராசரியாக 4.4 டாலரிலிருந்து 4.5 டாலர் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடா பகுதிகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 டாலருக்கு மேல் நீடித்து வருவது உலக சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும், கச்சா எண்ணெய் விநியோகம் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் விளைவாக அமெரிக்காவில் உணவுப் பொருட்கள், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்துள்ளன. பல்வேறு உற்பத்தி துறைகளிலும் செலவுகள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இந்த தாக்கத்தை அமெரிக்க மக்கள் தற்போது நேரடியாக உணரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாதகமான முன்னேற்றங்களும் உருவாகி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் பதற்றம் குறைந்து, கச்சா எண்ணெய் விநியோகம் சீரடையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
