IPL 2026: 15 வயதில் சிக்ஸ் மன்னனான வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்சர்களால் உலக சாதனை

IPL 2026: 15 வயதில் சிக்ஸ் மன்னனான வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்சர்களால் உலக சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான பேட்டிங் திறமையால் IPL 2026 தொடரில் புதிய வரலாற்றை எழுதி வருகிறார். வெறும் 15 வயதிலேயே டி20 கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை முறியடித்துள்ள அவர், தற்போது சிக்ஸ் மன்னனாக ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 230 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ், இன்னிங்சின் முதல் பந்திலேயே முகமது சிராஜை சிக்சருக்கு பறக்கவிட்டு அதிரடி தொடக்கத்தை வழங்கினார். தொடர்ந்து ககிசோ ரபாடா ஓவரிலும் இரண்டு சிக்சர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இந்த போட்டியில் வெறும் 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் குவித்த வைபவ், பவர் பிளே ஓவர்களில் 30 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய IPL சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 29 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இதோடு மட்டுமல்லாமல், 20 வயதிற்கு முன்பாகவே டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார். மேலும், மிகக் குறைந்த பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கீரன் பொல்லார்ட் 843 பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 514 பந்துகளில் 100 சிக்சர்களை பறக்கவிட்டு அந்த சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

நடப்பு IPL 2026 தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 440 ரன்கள் குவித்ததுடன் மொத்தம் 40 சிக்சர்களையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு IPL சீசனில் 40 சிக்சர்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா 42 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை முறியடிக்க வைபவ் இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்க வேண்டியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. வயதை மீறிய அவரது தைரியமான அணுகுமுறையும், அசுர பேட்டிங்கும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.