ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை வென்றது பெங்களூரு
- ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்...
- விராட் கோலியின் அரைசதம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஐபிஎல் 2026 தொடரின் சாம்பியன் யார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு அணி தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் விரைவில் ஆட்டமிழந்ததால் அணி அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டது.
மத்திய வரிசை வீரர்களான நிஷாந்த் சிந்து, ஜோஸ் பட்லர், அர்ஷத் கான் மற்றும் ராகுல் திவாடியா ஆகியோரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறினர். இதனால் குஜராத் அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
அணியின் சரிவை சமாளிக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடினார். அவர் 37 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது போராட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ரஷிக் சலாம் டார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் அதிரடியும் பொறுப்பும் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிப் பாதையை எளிதாக்கினர்.
வெங்கடேஷ் ஐயர் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் மற்றும் குர்ணால் பாண்டியா விரைவில் வெளியேறியதால் சிறிய பதற்றம் ஏற்பட்டது.
ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்ற விராட் கோலி, அனுபவம் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார். அரைசதம் கடந்த அவர் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றி மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.
