ஈரானின் அணு உலைகள், பாலங்களைத் தகர்க்க அமெரிக்கா திட்டம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
ஹார்மூஸ் ஜலசந்தி மோதலைத் தொடர்ந்து, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் அந்நாட்டின் அணு உலைகள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசித் தாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சூழலில், ஈரானில் உள்ள முக்கியப் பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை அமெரிக்கா குண்டுவீசித் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து பென்சில்வேனியா மாகாணத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "ஈரான் உடனடியாக எங்களுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால், அடுத்த வாரம் ஈரானின் எல்லைப் பகுதிகளை இலக்காகக் கொண்டு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும். குறிப்பாக, ஈரானின் அணு உலைகள் (Nuclear Reactor) மற்றும் முக்கியப் பாலங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
மேலும், "ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்தால் அந்நாட்டில் எவரும் மீதம் இருக்கப் போவதில்லை. நாளை இரவே ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்" என்றும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.