அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்த பங்களாதேஷ்.. அப்போ பாகிஸ்தான் நிலை?

Key Points
  • பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் தங்களின் ஏழாவது போட்டியில் மோதின.
அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்த பங்களாதேஷ்.. அப்போ பாகிஸ்தான் நிலை?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆடிய பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து 2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்துள்ளது

பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் தங்களின் ஏழாவது போட்டியில் மோதின. இரண்டு அணிகளுமே இனி ஆடும் லீக் போட்டிகள் அனைத்திலும் வென்றால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து அரை இறுதி வாய்ப்பு அமையும் என்ற நிலையில் இருந்தன.

அப்படி ஒரு மோசமான நிலையில் இருந்தும் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அந்த அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 68, பாக்கர் ஜமான் 81 ரன்கள் குவித்தனர். அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது பங்களாதேஷ் ஏழு போட்டிகளில் ஆடி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாளும் பங்களாதேஷ் ஆறு புள்ளிகள் மட்டுமே பெறும். 

ஏற்கனவே, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் 8 புள்ளிகள் பெற்று இருப்பதால், பங்களாதேஷ் 6 புள்ளிகள் பெற்றாலும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற்று அரை இறுதி செல்ல வாய்ப்பு இல்லை.

அதே சமயம், பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளில் ஆடி மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் பாகிஸ்தான் அணி 10 புள்ளிகளை பெறும், அப்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் இடங்களை பொறுத்து பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு அமையும்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google