திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தையா? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தையா? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4, 2026 அன்று வெளியாகிய நிலையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மே 7, 2026 அன்று பதவியேற்பு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், தவெகவுக்கு தேவையான முழு பெரும்பான்மை இதுவரை கிடைக்காததால் அரசியல் நிலைமை தொடர்ந்து பரபரப்பாக உள்ளது. குறிப்பாக, ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படாததால், ஆளுநர் இதுவரை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கட்சியின் சட்ட நிபுணர்களுடன் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், திட்டமிட்டபடி விஜயின் பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மற்றொரு பக்கம், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு தரப்பினரின் முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1979-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் திமுக மற்றும் அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக தொடரலாம் என்றும், திமுக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்றும் ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

தற்போது அதேபோன்ற அரசியல் சூழல் மீண்டும் உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறாததால், அவர் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் தலைவராக முன்னிலைப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த கட்டத்தில் உள்ளன, கூட்டணி சாத்தியம் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google