சிஎஸ்கே நிர்வாகத்துடன் கருத்து மோதல் – 2026 ஐபிஎல் சீசனுக்குப் பின் தோனி விலகல்: பரபரப்புத் தகவல்

சிஎஸ்கே நிர்வாகத்துடன் கருத்து மோதல் – 2026 ஐபிஎல் சீசனுக்குப் பின் தோனி விலகல்: பரபரப்புத் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழும் மகேந்திர சிங் தோனி, 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு அணியிலிருந்து முற்றிலுமாக விலகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் 13 ஆட்டங்கள் முடிந்த நிலையிலும், தோனி ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை; இம்பேக்ட் பிளேயராகவும் பயன்படுத்தப்படவில்லை. காயமே காரணம் என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கமளித்து வந்தாலும், உண்மையில் அணித் தேர்வு, மூத்த வீரர்களை ஒதுக்கும் உத்தி உள்ளிட்ட விடயங்களில் நிர்வாகத்துடன் தோனிக்கு கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக உள் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில், 2026 ஐபிஎல் முடிந்ததும் தோனி மஞ்சள் ஜெர்சியில் இருந்து முற்றுப்புள்ளி வைப்பார் என்று புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முக்கிய முடிவுகளில் தோனியின் கருத்து கேட்கப்படுவதில்லை; ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் ஒப்பந்த விவகாரங்கள் அவரது விருப்பத்துக்கு மாறாக எடுக்கப்பட்டதாகவும், இது தோனிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மூத்த வீரர்களைப் படிப்படியாக வெளியேற்றி, இளம் வீரர்களைக் கொண்ட அணியைக் கட்டமைக்கும் நீண்டகாலத் திட்டத்தில் உரிமையாளர்கள் கவனம் செலுத்துவதும் மற்றொரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தோனி அணியின் மீது வைத்திருக்கும் மரியாதையால் மட்டுமே இந்தச் சீசனை முழுமையாகப் புறக்கணிக்காமல் தங்கியிருந்தார் என்றும், தனது மனக்குறைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அணியின் கடமையில் இருந்து விலகவில்லை என்றும் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் வரலாற்றில் தோனி ஒரு முழு சீசனையும் தவறவிடுவது இதுவே முதல் முறை. சிஎஸ்கேவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தோனிக்கு ஏற்பட்ட மோதலையும் சுட்டிக்காட்டியுள்ள அஸ்வின், என்.ஸ்ரீனிவாசன் அணியைக் கவனித்தபோது இப்படி தோனி ஒதுக்கப்பட்டிருப்பாரா என மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையிலான உறவு கடுமையாகச் சீர்குலைந்துள்ளது உறுதியாகியுள்ளது.