சுற்றிலும் சுறாக்கள் வாழும் உலகின் ஆபத்தான சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு
1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் பல நேரங்களில் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்துவிடுவார். இதற்கிடையே அதிபர் டிரம்ப் இப்போது புதிதாக ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதாவது 1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார்.
தற்போது இது சுற்றுலா தளமாக உள்ள நிலையில், மீண்டும் இது சிறையாக மாறவுள்ளது.
அமெரிக்காவில் ஒரு காலத்தில் அதிகபட்சப் பாதுகாப்பு கொண்ட பெடரல் சிறை தான் அல்காட்ராஸ் சிறை. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் அமைந்துள்ளது.
கோட்டையாக இருந்த அல்காட்ராஸ், 1912இல் அமெரிக்க ராணுவ சிறையாக மாற்றப்பட்டது. பின்னர் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புகளும் அதிகரிக்கப்பட்டது. 1934 முதல் அது முக்கியமான சிறையாகச் செயல்படத் தொடங்கியது.
மூன்று மாடிகளைக் கொண்ட இந்தச் சிறை, அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறையாகக் கருதப்பட்டது.. இதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன.
இது தனியாக ஒரு தீவில் அமைந்துள்ளது. இதனால் அவ்வளவு ஈஸியாக கைதிகளால் தப்ப முடியாது. அப்படியே அதைத் தாண்டி கடலில் குதித்தாலும், குளிர்ச்சியான நீரும் வலுவான கடல் நீரோட்டமும் அவர்களைச் சிறிது தூரத்திற்கு மேல் செல்ல விடாது.
அதை எல்லாம் சமாளித்தாலும் கூட அங்குள்ள சுறாக்கள் அவர்களைக் காலி செய்துவிடும். இதன் காரணமாகவே பாதுகாப்பான சிறையாக அலல்காட்ராஸ் சிறை கருதப்பட்டது.
இதில் பிரதானச் சிறை கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டிருந்தது. அதில் நான்கு செல் பிளாக்குகள் இருக்கும். மேலும், வார்டன் அலுவலகம், விசிட்டிங் ரூம், ஒரு நூலகம் மற்றும் ஒரு சலூன் மட்டுமே அங்கு இருக்கும்.
அதில் மிகவும் ஆபத்தான கைதிகள் டி-பிளாக்கிற்கு அனுப்பப்பட்டதுடன், அந்தக் கடைசி ஆறு சிறை செல்களை தி ஹோல் என்று அழைத்தனர்.
1934ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்டபோது, அதில் இரும்பு படிக்கட்டுகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. உப்புக் காற்று மற்றும் நீர் அரிப்பைக் காரணமாகச் சிறை சுவர்கள் சேதமடைந்து இருந்த நிலையில், அவை வலுப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் சிறைகளில் இருந்து எந்தவொரு கைதியும் தப்பித்துப் போக முடியாத சூழல் உருவாக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுக்கான கடைசி இடமாக அல்காட்ராஸ் சிறை இருந்தது.
அமெரிக்க வரலாற்றில் அதிபயங்கரத் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ல்போன்ஸ் கபோன், ஜார்ஜ் "மெஷின் கன்" கெல்லி மற்றும் ராபர்ட் பிராங்க்ளின் ஸ்ட்ரூட் உள்ளிட்டோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருப்பினும், கடலில் அமைந்துள்ளதால் அதைப் பராமரிக்கவே பெரிய தொகை செலவானது. மேலும், பழைய கட்டிடம் என்பதால் சிறையின் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அல்காட்ராஸ் சிறை 1963ஆம் ஆண்டு மூடப்பட்டது.
1972ல் இந்தச் சிறை அமெரிக்கத் தேசியப் பூங்கா சர்வீஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிறகு அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்தச் சூழலில் தான் இதை மீண்டும் சிறையாக மாற்றி, அதைத் திறக்க டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.