இலங்கை பின்னணி.. சினிமா டூ சீரியல்.. யார் இந்த சுபாஷினி? - விபரீத முடிவின் பின்னணி என்ன?

'இனி அவன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கயல்' சீரியல் வரை முத்திரை பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண் சுபாஷினி, திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இலங்கை பின்னணி.. சினிமா டூ சீரியல்.. யார் இந்த சுபாஷினி? - விபரீத முடிவின் பின்னணி என்ன?

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் நடிகை சுபாஷினி. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கலைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்குத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 2012-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'இனி அவன்' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தார். அதன் பிறகு பல குறும்படங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு வீடியோக்களில் தோன்றி, ஒரு தேர்ந்த நடிகையாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

சுபாஷினியின் கலைப்பயணம் திரைப்படங்களோடு நின்றுவிடவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இருப்பினும், சன் தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'கயல்' சீரியலில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்குப் மிகப்பெரிய அடையாளத்தைத் தேடித்தந்தது.

சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் (Instagram) மிகவும் ஆக்டிவாக இருந்த அவர், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பிலேயே இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சுபாஷினிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் பிபின் சந்திரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த அவர், படப்பிடிப்புப் பணிகளுக்காகச் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அவரைத் தற்கொலை வரை தூண்டியுள்ளது.

"நான் உயிரை மாய்த்துக் கொள்ளப்போகிறேன்" என்று கணவரிடமே கூறிவிட்டு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, இந்த மரணத்திற்குப் பின்னால் உள்ள மற்ற காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர