தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்... இயக்குநர் சற்குணத்தின் புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறாரா?
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இயக்குநர் சற்குணம் இயக்கும் 'குரத்தி' வலைத் தொடரின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டு வெளியான 'தடாக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், இந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
அதன்பின், கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். மேலும், ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ள 'பெத்தி' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழில் எப்போது நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கவுள்ள 'குரத்தி' என்ற புதிய வலைத் தொடரின் மூலம் ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
