தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வர் பாதுகாப்பு வாபஸ்.. என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் கட்சியாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததன் மூலம் தவெக கூட்டணிக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், காவல்துறை உயர் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெற்றி சான்றிதழ் பெற விஜய் பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலரை சந்திக்க சென்றபோது, அவரது வாகனத்திற்கு முன்பும் பின்னும் முதல்வருக்கு வழங்கப்படும் வகையிலான கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இந்த பாதுகாப்பு நடைமுறையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், நேற்று பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாகவே கான்வாய் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டன. பின்னர், எந்த கான்வாய் பாதுகாப்பும் இன்றி விஜய் தனது காரில் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் தாமாகவே கான்வாய் பாதுகாப்பை வேண்டாம் என தெரிவித்து, பாதுகாப்பு வாகனங்களை திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
