ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது: டிரம்ப் கடும் எச்சரிக்கை
- ஹார்முஸ் ஜலசந்தியை எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய டிரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளுக்கும் திறந்த சர்வதேச கடல் பாதையாகும். அந்த பகுதியை எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது. உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையில் தடைகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உள்ளது. ஓமான் மற்ற நாடுகளைப் போல பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்பதை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்” என்றும் டிரம்ப் கூறினார்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயலும் ஈரான், அந்த வழியாக செல்லும் சரக்கு கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வருவாயை ஓமனுடன் பகிர்ந்து கொள்ளும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் டிரம்பின் இந்த கடும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
