“48 மணி நேரத்தில் நரகம் இறங்கும்” – ஈரானுக்கு டிரம்பின் கடும் எச்சரிக்கை, உலகம் பதற்றம்
மத்திய கிழக்கில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போர் சூழ்நிலையில், Donald Trump ஈரானுக்கு கடும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவோ அல்லது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவோ 48 மணி நேரம் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குள் முடிவு எடுக்கப்படவில்லை என்றால், “முழுமையான நரகம் இறங்கும்” என்கிற அவரது கடுமையான வார்த்தைகள் உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதி முழுவதும் உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளது.
இந்த நிலைமையின் மையமாக ஹார்முஸ் நீரிணை மாறியுள்ளது. உலகின் சுமார் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த வழியாக கடத்தப்படுவதால், அதன் முடக்கம் சர்வதேச பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
இந்த பின்னணியில், உலக நாடுகள் அமெரிக்காவுக்கு விரைவான தீர்வை எடுக்க அழுத்தம் கொடுத்து வருகின்றன. முன்பு ஈரானின் மின்சார கட்டமைப்புகள் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளித்ததாக டிரம்ப் கூறியிருந்தார்.
இருப்பினும், அந்த வாய்ப்பை ஈரான் நிராகரித்ததாகவும், அமெரிக்காவின் கோரிக்கைகள் ஒருதலைப்பட்சமானவை என கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை, அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்கிறது என அமெரிக்க தரப்பு கூறினாலும், ஈரான் அதனை மறுத்து வருகிறது.
இந்த சூழலில் காலக்கெடு முடிந்த பிறகு அமெரிக்கா எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்பது உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
