சரமாரியாக திட்டிய ஹர்திக்... வெளுத்து வாங்கிய திலக் வர்மா... 23 பந்துகளில் 82 ரன்கள்!

சரமாரியாக திட்டிய ஹர்திக்... வெளுத்து வாங்கிய திலக் வர்மா... 23 பந்துகளில் 82 ரன்கள்!

திலக் வர்மா தனது திறமையை மீண்டும் நிரூபிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மும்பை அணிக்காக விளையாடிய அவர், குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து ‘ஆட்டநாயகன்’ விருதை கைப்பற்றினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய திலக், இந்த சதம் தனக்கும் அணிக்கும் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். சமீபத்திய போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து விளையாட முடியாததால், இந்த முறை அதையே முக்கிய இலக்காக வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னிங்ஸின் தொடக்கம் மிக மெதுவாக இருந்தது. முதல் 20 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் முற்றிலும் வேறொரு ரிதத்தில் விளையாடத் தொடங்கினார். அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சை சிதறடித்தார். தனது திறமையை நம்பி, சூழ்நிலைக்கு ஏற்ப ஆடியதே இந்த மாற்றத்திற்கு காரணம் என அவர் விளக்கினார்.

அணியின் தேவையை புரிந்து கொண்டு தன்னுடைய அடிப்படை ஆட்டத்தையே நம்பியதாகவும், தேவையான சமயத்தில் புதுமையான ஷாட்களை பயன்படுத்தியதாகவும் திலக் கூறினார். மேலும், அழுத்தமான சூழலில் தன்னம்பிக்கை முக்கியம் என்றும் அதுவே நல்ல முடிவைத் தந்ததாகவும் தெரிவித்தார்.

போட்டியின் ஆரம்பத்தில் ரபாடா மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை சிக்கலில் தள்ளினார். ஆனால் திலக் வர்மாவின் அபார இன்னிங்ஸ் அணியை 199/5 என்ற வலுவான ஸ்கோருக்கு கொண்டு சென்றது.

பின்னர் பந்துவீச்சில் பும்ரா ஆரம்பத்தில் தாக்கம் ஏற்படுத்த, அஷ்வனி குமார் மத்திய ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மும்பை அணியின் பக்கம் திருப்பினார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் திலக் வர்மா முதல் ஐபிஎல் சதம் விளாசி தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி தந்துள்ளார். அத்துடன், முன்னதாக ஹர்திக் திட்டியமைக்கும் பதிலடி கொடுத்து உள்ளார்.