பவுண்டரி அடித்த நிலையில் அவுட் என அறிவிக்கப்பட்ட தமிழக வீரர்.. நடந்தது என்ன?
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த 255 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், குஜராத் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சாய் சுதர்சன் எதிர்பாராத விதமாக ஹிட் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்த சாய் சுதர்சன், அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
9 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யாக்கோப் டஃபி வீசிய மூன்றாவது ஓவரில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்தது. ஷார்ட் லெங்த் பந்தை கட் செய்ய முயன்ற சாய் சுதர்சன், ஷாட்டை அடித்தபோது அவரது கையில் இருந்து பேட் நழுவி பின்னால் சென்று ஸ்டம்பில் பட்டது. பெயில்கள் கலைந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியுடன் வெளியேறினார். முக்கியமான நாக்அவுட் போட்டியில் இந்த வகை ஆட்டமிழப்பு குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
முன்னதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்சில் 9 சிக்ஸர்கள் இடம்பெற்றன.
மேலும் விராட் கோலி 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 30 ரன்களும் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.
கடைசி ஓவர்களில் ரஜத் படிதார் மற்றும் குர்ணல் பாண்டியா இணைந்து வேகமாக ரன்கள் குவித்ததால் பெங்களூரு அணி 250 ரன்களை கடந்தது. குர்ணல் பாண்டியா 43 ரன்கள் சேர்த்து முக்கிய பங்காற்றினார்.
