11 ஆண்டுகளுக்கு பிறகு களத்துக்கு திரும்பும் ரொனால்டினோ? இத்தாலி கிளப்பில் இணைந்ததாக தகவல்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, இத்தாலியின் ரவென்னா கால்பந்து அணியுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ, இத்தாலியின் ரவென்னா கால்பந்து அணியுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்துள்ள ரொனால்டினோ, கடைசியாக 2015ஆம் ஆண்டு பிரேசிலின் ஃபுலுமினன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் அவர் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
சுமார் 17 ஆண்டுகள் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் விளையாடிய ரொனால்டினோ, தனது அபார திறமையால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இத்தாலியின் ரவென்னா அணியுடன் இணைந்துள்ள அவர், இளம் தலைமுறை வீரர்கள் தங்களது கனவுகளை நோக்கி முன்னேற ஊக்குவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ரவென்னா கால்பந்து அணி, இத்தாலியின் எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தைச் சேர்ந்த சிறிய அளவிலான கிளப்பாகும். அந்த அணியின் சொந்த மைதானத்தில் சுமார் 12,000 ரசிகர்கள் அமரக்கூடிய வசதி உள்ளது.
ரொனால்டினோவின் இந்த இணைவு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
