இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மர்ம மரணம் வெளியான அதிர்ச்சித் தகவல்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.


இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மர்ம மரணம் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கிங் மூலம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா ராஜபக்ஷ, தனது இல்லத்தின் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் விசாரணைக்கு பெரும் தடையாக அமைந்திருப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய, கீழ் வீரம்பெ பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜபக்ஷவின் மகள், தனது தந்தை தோட்டத்தில் விழுந்திருப்பதைக் கண்டு, முதலில் தாயாரிடமும், பின்னர் பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தோட்டத்தில் ஒரு வாழை மரத்தின் அருகே பெரிய இரத்தக் கறையையும், அருகில் ஒரு சிறிய கத்தியையும் கண்டெடுத்தனர்.

ராஜபக்ஷவின் கை மற்றும் காலில் மூன்று ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையா, தற்கொலையா என்பதை உறுதி செய்ய, குளியாப்பிட்டிய நீதிபதி நேரில் சென்று நீதிபதி விசாரணையை மேற்கொண்டார். உடற்கூறு ஆய்வுக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தின் தொடக்கப் புள்ளியே ரங்கா ராஜபக்ஷவின் கவனக் குறைவுதான் எனத் தெரிகிறது. போலி மின்னஞ்சல் மூலம், ஹேக்கர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு வழங்கியுள்ளனர். அந்த முதல் மின்னஞ்சலுக்கு ராஜபக்ஷவே பதிலளித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுவே, பணம் ஹேக்கர்களிடம் சென்றதற்கான முக்கிய படியாகும்.

இதுதொடர்பாக, ரங்கா ராஜபக்ஷவை CID மூன்று முறை விசாரணைக்கு அழைத்திருந்தது. ஒருமுறை அவர் பணியில் இருந்தபோதும், இரண்டுமுறை பணி இடைநீக்கத்திலும் அவர் CID-க்கு வந்து விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்துள்ளார். மேலும், அவரது கணினியும் CID-யினரால் கைப்பற்றப்பட்டது. வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்திருந்தது.

ஆச்சரியப்படும் வகையில், ரங்கா ராஜபக்ஷவின் பின்னணி குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், அவர் ஒரு ஊழல் அதிகாரி அல்ல என்பதும், அவரது கைதுக்கு ஆதரவான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தருணம் முதல் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மனப்பதற்றமே அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் எனவும், அல்லது இது ஒரு சூழ்ச்சிக் கொலையாகவும் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த மரணம், ஏற்கனவே சிக்கலான 2.5 மில்லியன் டொலர் மாய வழக்கின் விசாரணைக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மரணம் எங்கள் விசாரணைக்கு ஒரு பெரும் தடையாகும். அவரால் மேலும் பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்" என்று தெரிவித்தார். தற்போது தற்கொலை மற்றும் கொலை இரு கோணங்களிலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google