சகோதரியின் கணவருடன் தவறான உறவு: வருங்கால கணவனை கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்
ஜார்க்கண்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகள் ஊர்மிளா மற்றும் அவரது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில், வருங்கால மணமகளும் அவரது சகோதரியின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தகவலின்படி, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், ஊர்மிளாவுக்கு தனது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுடன் நெருங்கிய உறவு இருந்ததாகவும், குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்ததால் அந்த உறவு பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து நீரஜை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊர்மிளா தனது வருங்கால கணவரை பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு வருமாறு அழைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு ஏற்கனவே காத்திருந்த ஊர்மிளாவும் சுபாஷ் பஸ்வானும் இணைந்து நீரஜை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், உடலை வனப்பகுதியில் விட்டுச் சென்றால் வனவிலங்குகள் சிதைத்துவிடும் என்பதால் ஆதாரங்கள் அழிந்துவிடும் என அவர்கள் கருதியதாகவும் கூறப்படுகிறது.
நீரஜ் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மொபைல் போன் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, நீரஜின் கடைசி இருப்பிடம் பேலா வனப்பகுதி என்பது தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்மிளாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சதியில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், சுபாஷ் பஸ்வானையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.