30 நிமிடங்களில் 3 எச்சரிக்கைகள்: “மீண்டும் எழ முடியாத அளவுக்கு தாக்குவோம்” – அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் வகையில் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், வெறும் 30 நிமிடங்களுக்குள் மூன்று முறை அவர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. ஈரானின் அணுத் திட்டம் குறித்த பதற்றத்தை குறைப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, கமேனியிடமிருந்து கடும் எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவின் ராணுவ பலத்தை விமர்சித்த கமேனி, ஈரான் அருகே அமெரிக்க படைகள் குவிக்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட கருத்துகளில், “47 ஆண்டுகளாக இஸ்லாமியக் குடியரசை அகற்ற முடியவில்லை என்பதே அமெரிக்க அதிபரின் ஒப்புதல். உங்களாலும் ஈரானை வீழ்த்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், “உலகிலேயே வலிமையான ராணுவம் எங்களிடம் உள்ளது என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அந்த வலிமையான படையே சில நேரங்களில் மீண்டும் எழ முடியாத அளவுக்கு தாக்கப்படலாம்” என அவர் எச்சரித்தார். சில நிமிடங்களில் வெளியிட்ட மூன்றாவது பதிவில், “ஈரான் நோக்கி அனுப்பப்படும் போர்க்கப்பல் ஆபத்தானது தான். ஆனால் அதைவிட ஆபத்தானது, அந்தக் கப்பலைக் கடலில் அனுப்பக்கூடிய ஆயுதம்” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்கா தனது இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்ப உத்தரவிட்டுள்ளது. USS Abraham Lincoln தற்போது ஈரான் அருகே இருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்றான USS Gerald R. Ford வரும் வாரங்களில் அந்தப் பகுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடற்படைப் பயிற்சிகளை நடத்தியுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி இவ்வாறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அமைதி பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
