ஹோர்முஸ் நீரிணை பிரச்சினை: ஈரானை கண்டித்து 22 நாடுகள் கூட்டறிக்கை
ஹோர்முஸ் நீரிணை விவகாரம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் நடவடிக்கைகளை கண்டித்து 22 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி அளித்து வரும் ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளது.
மேலும், நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ராணுவ தளத்தையும் குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொண்டது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து, ஈரான் உடனடியாக தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது சர்வதேச சட்டத்தின் அடிப்படை என்றும் அவை தெரிவித்துள்ளன.
கூட்டறிக்கையில், ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளதுடன், கண்ணிவெடிகள் பதிதல், ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் ஈரானை கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு இணங்க செயல்படுமாறும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை பிரச்சினை சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
