சென்னை அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? இன்ஸ்டா பதிவால் பரபரப்பில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட மர்மமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கிரிக்கெட் உலகில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வியுற்ற மறுநாள், திங்கள் மதியம் பாண்டியா பகிர்ந்த படத்தில் அவரது மொபைல் திரையில் நேரம் 07:07 எனத் துல்லியமாகத் தெரிந்தது.
எண் 7 என்றதுமே தல தோனியின் அடையாளம் என்பதால், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ரகசிய சமிக்ஞை என்று ரசிகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர். மும்பையில் பாண்டியாவின் சகாப்தம் முடிந்து, அடுத்த மெகா ஏலத்தில் அவர் சிஎஸ்கேவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் பேச்சு பரவி வருகிறது.
தோல்விக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்ட், “ஒரு தனிநபராகவும் கேப்டனாகவும் ஹர்திக் நினைத்தபடி இந்த சீசன் அமையவில்லை.
நிர்வாக எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை. ஆனாலும், அணியைச் சிறப்பாக வழிநடத்த அவருக்கு முழு ஆதரவும் கொடுத்தோம். தோல்விக்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது; இது கூட்டு பொறுப்பு. இப்போது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், அடுத்த 12 மாதங்களில் மீண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
2023-ன் இறுதியில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து பெரும் தொகைக்கு மும்பைக்குத் திரும்பிய ஹர்திக், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைப் பறித்தபோது ரசிகர் எதிர்ப்பைச் சந்தித்தார்.
அவரது தலைமையில் 2024-ல் மும்பை கடைசி இடம் பிடித்தது; 2025-ல் தகுதிச் சுற்று 2 வரை முன்னேறியது. ஆனால் 2026-ல் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளே பெற்று 9-வது இடத்துடன் வெளியேறியது. பாண்டியாவின் தனிப்பட்ட ஆட்டமும் மோசமாக இருந்தது.
202 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இந்தப் பின்னணியில் அவரது இன்ஸ்டா ஸ்டோரி, அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணியில் பெரும் மாற்றம் வரப்போவதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
