பிபிசிக்கு எதிராக $5 பில்லியன் கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு

இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவில்லை என்றும், பிபிசி ஐபிளேயர் வழியாக பிரித்தானியா பார்வையாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவும் பிபிசி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
பிபிசிக்கு எதிராக $5 பில்லியன் கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2021 ஜனவரி 6 அன்று அவர் ஆற்றிய உரையை பனோரமா ஆவணப்படத்தில் திருத்தி வெளியிட்டதாகக் கூறி, பிபிசிக்கு எதிராக 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் £3.7 பில்லியன்) இழப்பீடு கோரி அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு புளோரிடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி அவதூறு செய்ததுடன், வர்த்தக நடைமுறைச் சட்டங்களையும் மீறியதாக நீதிமன்ற ஆவணத்தில் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

உரை திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் பிபிசி, டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும், அவதூறு குற்றச்சாட்டுக்கு அடிப்படை இருப்பதையும் பிபிசி மறுத்துள்ளது.

டிரம்பின் சட்டக் குழு, “வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் மற்றும் ஏமாற்றும் வகையில்” அவரது உரை மாற்றப்பட்டதாகவும், இதன்மூலம் அவர் வன்முறையைத் தூண்டியதாக தவறான எண்ணம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்குக்கு பிபிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

2024 அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்ட பனோரமா ஆவணப்படம் தொடர்பாக பிபிசிக்கு எதிராக வழக்குத் தொடர இருப்பதாக டிரம்ப் கடந்த மாதமே அறிவித்திருந்தார். “அவர்கள் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை மாற்றினார்கள். அது ஏமாற்று வேலை,” என டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க தலைநகரில் நடந்த கலவரத்திற்கு முன்பு, டிரம்ப் தனது உரையில் “நாங்கள் தலைநகருக்கு நடந்து செல்வோம்” மற்றும் “நாங்கள் நரகத்தைப் போல போராடுகிறோம்” போன்ற வாசகங்களை பயன்படுத்தியிருந்தார். ஆனால் பனோரமா நிகழ்ச்சியில், இந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்ட விதம், அவர் நேரடியாக வன்முறைக்கு அழைப்பு விடுத்தார் என்ற தவறான கருத்தை உருவாக்கியதாக பிபிசி ஒப்புக்கொண்டது. இருப்பினும், அது அவதூறு ஆகாது என்ற நிலைப்பாட்டில் பிபிசி உள்ளது.

நவம்பர் மாதத்தில் கசிந்த பிபிசி உள் குறிப்பு, உரை திருத்தம் செய்யப்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்தது. இதன் தொடர்ச்சியாக, பிபிசியின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவி விலகினர்.

இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவில்லை என்றும், பிபிசி ஐபிளேயர் வழியாக பிரித்தானியா பார்வையாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவும் பிபிசி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதால், அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பிபிசியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர