இங்கிலாந்து தொடர் சவால்... கோலி, ரோஹித்திடம் புதிய கேப்டன் சுப்மன் கில் ஆலோசனை!
இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றதாகக் இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதுடன், இது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடராக அமைய உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதுடன், மூன்று முறை மட்டுமே இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
1971, 1986 மற்றும் 2007 ஆகிய மூன்று முறை மட்டுமே இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
அந்த தொடர்கள் மூன்று அல்லது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் என்ற நிலையில், தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரே நேரத்தில் ஓய்வு அறிவித்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கின்ற நிலையில், ஐபிஎல் தொடரின் போது அவர்கள் இருவரையும் சந்தித்து அவர்களின் அனுபவத்தைக் கேட்டு அறிந்ததாக சுப்மன் கில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
"கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரையும் ஐபிஎல் தொடரின்போது சந்தித்து இங்கிலாந்து மண்ணில் அவர்களது அனுபவத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன்.
இந்திய அணிக்காக கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய கௌரவம். விராட் கோலிக்கு பிறகு அவரது நான்காம் வரிசையில் தன்னை ஆட வைப்பது பற்றி கௌதம் கம்பீர் என்னிடம் பேசினார். எனவே தான் அந்த இடத்தில் நான் ஆடப்போகின்றேன்” என சுப்மன் கில் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு துவங்க உள்ளது.