இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என  ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என  ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்தது. இத்தொடருக்கான இந்திய அணியில், விக்கெட் கீப்பர் இடத்தில் கே.எல்.ராகுலும், பேக்கப் கீப்பர் இடத்தில் துரூவ் ஜோரல் பெயரும் இடம்பெற்றது.

திடீரென்று சஞ்சு சாம்சனை ஓரங்கட்டிவிட்டு, பேக்கப் கீப்பர் இடத்தில் துரூவ் ஜோரல் பெயர் இடம்பெற்றிருப்பது, பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. 

குறிப்பாக, சாம்சன் கடைசியாக விளையாடிய போட்டியில் சதம் அடித்திருந்தார். தென்னப்பாரிக்காவுக்கு எதிராக 2023ஆம் ஆண்டில் இதனை செய்திருந்தார். இப்படி திறமையை நிரூபித்தப் பிறகும், அடுத்து ஒருநாள் பார்மெட்டில் புறக்கணித்திருப்பது, விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஶ்ரீகாந்த், சாம்சனை நீக்கியது தவறான முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்றும் சாம்சன், தான் விளையாடிய கடைசி போட்டியில் சதம் அடித்திருந்தார். அப்படியிருந்தும் அவரை சேர்க்கவில்லை. அவரை ஏன் இப்படி கஷ்டப்படுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், திடீரென்று 5ஆவது இடத்தில் ஆட வைக்கிறீர்கள், திடீரென்று ஓபனராக ஆடுகிறார். ஒருசில சமயம் 7-8 ஆகிய இடங்களிலும் ஆட வைக்கிறீர்கள். இப்படி அடிக்கடி இடத்தை மாற்றி மாற்றி ஆட வைத்து, தற்போது அணியைவிட்டே தூக்கிவிட்டீர்கள். இப்படி இருந்தால், எப்படி ஒரு வீரருக்கு மன உறுதி சம அளவில் இருக்கும். பயம்தானே ஏற்படும். 

யாஷஸ்வி ஜெய்ஷ்வால் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. திடீரென்று தொடர்ச்சியாக வாய்ப்பை பெறுகிறார். திடீரென்று அவரை முற்றிலும் நீக்கிவிடுகிறீர்கள். இதனால், அனைத்து வீரர்களுக்கும் பயம் ஏற்படும். பயத்திலேயே வீரர்களை வைத்திருப்பது தவறு எனக் கூறினார்.

இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் இடத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார். இவர் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் விளையாடதான் வாய்ப்புள்ளது. அதுவும், ஆஸ்திரேலியா போன்ற பலமிக்க அணிக்கு எதிராக ராகுலை உட்கார வைத்துவிட்டு, ஜோரலை சேர்க்க வாய்ப்பு மிகவும் குறைவு. 
ஆகையால், ஜோரல் பெஞ்சில் மட்டுமே அமர முடியும். இதற்காக, ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து சாம்சனை நீக்கி, ஜோரலை சேர்க்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டி, பெர்த்தில், அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி அடிலெய்டில் 23ஆம் தேதி நடைபெறும். 

கடைசி போட்டி, சிட்னியில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும். மூன்றாவது போட்டி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பேர்வெல் போட்டியாக கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்திய ஒருநாள் அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), அக்சர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துரூவ் ஜோரல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால்.