டிரம்புடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தயார்: திடீரென டோனை மாற்றிய ஈரான்… அமெரிக்காவுக்கு வைத்த ‛பிக் டிமாண்ட்’
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக கடும் பதற்றம் நீடித்து வருகிறது. எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை நீக்கினால், அணுஆயுதம் தயாரிப்பை கட்டுப்படுத்தும் வகையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் தனது அணுஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்காக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் டிரம்ப், ஈரான் விரைவில் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இந்நிலையில், ஈரான் தரப்பில் இருந்து வெளியான புதிய கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜீத் தக்த்-ரவாஞ்சி கூறுகையில், “அமெரிக்கா நேர்மையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், நாங்களும் ஒப்பந்தத்தை நோக்கி நகர தயாராக இருக்கிறோம். ஆனால் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை மிரட்டுவதும், பல்வேறு தடைகளை விதிப்பதும் பேச்சுவார்த்தையை கடினமாக்குகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆரம்பத்தில் சில நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தாலும், தற்போது நாம் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம்” என்றார்.
மேலும், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, எங்களின் ஏவுகணைகளே எங்களை பாதுகாத்தன. எனவே, ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் எங்களின் பாதுகாப்பு திறன்களை இழக்க நாம் எவ்வாறு ஒப்புக்கொள்வது? இருப்பினும், அமெரிக்கா உண்மையாக தடைகள் குறித்து பேச தயாராக இருந்தால், எங்களின் அணுசக்தி திட்டங்கள் உள்ளிட்ட பிற விவகாரங்களை விவாதிக்க தயார்” என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டுமா, அல்லது சில குறிப்பிட்ட தடைகளே போதுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
ஈரான் தனது பாதுகாப்புக்காக அணுஆயுதம் தயாரிக்க ஆர்வம் காட்டுவதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் அணுஆயுத உற்பத்தியை நோக்கியே செல்வதாக உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. அணுஆயுதம் தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படும் நிலையில், ஈரானிடம் தற்போது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அமெரிக்காவின் கவலையை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமீபத்தில் பேசுகையில், “டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை விரும்புகிறார். ஆனால் ஈரானுடன் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது” என்று தெரிவித்தார். அதே நேரத்தில், டிரம்ப் ஈரான் மீது தொடர்ந்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்.
அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், அதற்கான அழுத்தமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
