கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி: 13 பேர் பயணம், 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (பௌத்த வன ஆசிரமம்) பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கேபிள் கார் அறுந்து விழுந்தது.
விபத்து நடந்தபோது கேபிள் காரில் மொத்தம் 13 பிக்குகள் பயணித்துள்ளனர்.
உயிரிழந்த ஏழு பிக்குகளில், மூவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் ஆவர்.
விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
காயமடைந்த ஆறு பிக்குகளும் குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
