28 பந்தில் 97 ரன்கள் – கெயில் சாதனையை நூலிழையில் மிஸ் செய்த சூர்யவன்ஷி; ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் ஐதராபாத்துக்கு மரணபயம்
- ஐபிஎல் 2026 எலிமினேட்டரில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி 28 பந்தில் 97 ரன்கள் குவித்து, கிறிஸ் கெயிலின் அதிவேக சத சாதனையை 3 ரன்களில் மிஸ் செய்தார்.
- 12 சிக்ஸர்களுடன் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய இந்தியர் என்ற சாதனையும் படைத்தார்.
19-வது ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைப் பந்தாடி, மிகப்பெரிய சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.
பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கிய சூர்யவன்ஷி தொடக்கத்திலிருந்தே வெடிகுண்டு அதிரடியில் இறங்கினார்.
வெறும் 16 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து மிரட்டிய அவர், கம்மின்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். இதன்மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை (59 சிக்ஸர்கள்) முறியடித்தார்.
மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு முறை 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ராஜஸ்தான் அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்தது.
சதத்தை நோக்கி விரைந்த சூர்யவன்ஷி, வெறும் 28 பந்துகளில் 97 ரன்களை எட்டியிருந்தார். கிறிஸ் கெயில் வைத்திருக்கும் மிக விரைவான ஐபிஎல் சதம் (30 பந்துகள்) என்ற சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்த்த நிலையில், பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் கெயிலின் சாதனையை வெறும் 3 ரன்களில் சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டாலும், ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் (12 சிக்ஸர்கள்) என்ற புதிய சாதனையைப் படைத்து அசத்தினார்.
