சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் வர வாய்ப்பு – அனில் கும்ப்ளே கணிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
தற்போது அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக வரலாம் என கும்ப்ளே கணித்துள்ளார்.
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாகசாம் கரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு சென்றனர்.
சுமார் 11 சீசன்களாக ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த சஞ்சு சாம்சன், இனி மஞ்சள் ஜெர்சியில் விளையாட உள்ளார்.
இந்த மாற்றத்தை பாராட்டிய கும்ப்ளே, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று குறிப்பிட்டார். மேலும், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமுறை தொடர்ச்சியில் சாம்சன் முக்கிய இடம் பெறுவார் என்றும் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன் ஒரு திறமையான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதுடன், நீண்ட காலம் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளதால் துணை கேப்டன் பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் எனவும் கூறினார்.
மேலும், அணியில் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் சாம்சன் இருப்பது சிஎஸ்கேக்கு கூடுதல் பலமாக இருக்கும். ஒருவேளை ருதுராஜ் காயமடைந்தால், சாம்சன் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த சீசனில் ஏதாவது ஒரு கட்டத்தில் எம்.எஸ் தோனி தனது விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் சஞ்சு சாம்சனுக்கு ஒப்படைக்கலாம் என்றும் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
