சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்க பொலிஸார் நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்க பொலிஸார் நடவடிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகளவான வருகையை எதிர்பார்த்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது கூட்டுப் பொறுப்பாகும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்படி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் முரண்பாடுகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டத்தை தயாரித்து அமுல்படுத்த இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ள நிலையில் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு பலப்படுத்தப்படும்.

Also Read : அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை 

இன்று முதல், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து 1997 என்ற இலங்கை பொலிஸாரின் அவசர தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்களை பொலிஸார் வலியுறுத்தி உள்ளனர்.

அத்துடன், திருடர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தைக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.