இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

Key Points
  • எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
  • இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள்.
  • இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள். 
இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

இந்திய அணிக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியின் தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணி கேப்டன் குசால் மென்டிஸ், தோல்விக்கு என்ன காரணம் என விளக்கினார்.

டாஸ் முடிவை தவறாக எடுத்ததாக விமர்சகர்கள் கூறிய நிலையில், அதற்கும் விளக்கம் கொடுத்தார். மேலும், இந்திய அணி வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் தங்கள் அணி செய்த தவறு என குறிப்பிட்டார். 

அது போன்ற வாய்ப்புகள் போட்டியை மாற்றி விடும் எனவும் அவர் கூறினார். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் ஆடி 357 ரன்கள் குவித்தது, விராட் கோலி 88 ரன்கள், சுப்மன் கில் 92 ரன்கள் குவித்தனர், அவர்கள் இருவரும் முதல் பத்து ஓவர்களுக்குள் ஆளுக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார்கள். 

உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

அந்த கேட்ச்களை இலங்கை அணி பிடித்து இருந்தால் இந்தப் போட்டியின் நிலை வேறு மாதிரி இருந்திருக்கலாம். மேலும், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழல் இருக்கும் என ரிக்கி பாண்டிங் போன்ற அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் பிட்ச்சை பார்த்து விட்டு கூறிய நிலையில், குசால் மென்டிஸ் அதற்கு நேர் மாறாக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனால், இந்தியா நிர்ணயித்த 358 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததே இந்த மோசமான விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம். இவை எல்லாம் பற்றி இலங்கை கேப்டன் பேசினார்.

"எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள். 

துரதிர்ஷ்டவசமாக இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். முதல் பாதியில், பந்து மெதுவாக செல்லும் எனக் கணித்தே நான் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தேன்." என்றார் குசால் மென்டிஸ்.

மேலும், "எங்கள் அணியில் மதுசங்க சிறப்பாக பந்து வீசினார். ஆனால், நாங்கள் கோலி, கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டோம். அந்த தருணங்கள் தான் போட்டியை மாற்றும். மத்திய ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 

இந்திய அணி முதல் 6 ஓவர்களில் மிக சிறப்பாக பந்து வீசியது. இன்றைய ஆட்டத்தில் அனைத்து பாராட்டும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தான் செல்ல வேண்டும். எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. நாங்கள் முழு பலத்துடன் மீண்டும் வருவோம்" என்றார் குசால் மென்டிஸ்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google