6 நாள் இறுதிச்சடங்கு நிறைவு: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்!
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல், 6 நாள் பிரம்மாண்ட இறுதிச்சடங்குகளுக்குப் பின் மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல், 6 நாட்கள் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில், 34 ஆண்டுகளாக ஷியா பிரிவு இஸ்லாமியர்களை வழிநடத்தி வந்த 86 வயதான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி அமைப்புகளுக்கு இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரப் போர் வெடித்தது. ஈரான் மற்றும் லெபனானில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய இந்த மோதல், 40 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் மூலம் கட்டுக்குள் வந்தது.
போர்ச் சூழல் காரணமாக தள்ளிப்போன இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்காக, அமைதி பேச்சுவார்த்தையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தொடங்கிய இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 6 நாட்களாக நடைபெற்றன.
காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் தெஹ்ரான், கோம், நஜாப் மற்றும் கர்பலா ஆகிய முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சில நாடுகள் இந்த நிகழ்வைப் புறக்கணித்த போதிலும், உலக நாடுகளின் பிரதிநிதிகள் பலரும், சுமார் 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதியில், லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
