2,000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்: தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் நாகரிகத்தின் அரிய வரலாற்றுச் சான்று
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடந்த அகழாய்வில், கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் பிராமி/தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுப் பதிவுகளை மீண்டும் எழுதும் வகையில், தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் அரிய தொல்லியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. பேங்காக்கிற்கு தென்மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டான் யாய் தாங் என்ற கிராமத்தில், உள்ளூர் மக்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நெல் வயலில் பழமையான வெண்கல முரசுகளின் துண்டுகளைக் கண்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்து அரசின் தொல்லியல் துறையான 'பைன் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்' கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்த அகழாய்வு தளம் வரலாற்றுக்கு முந்தைய இரும்புக்காலத்தைச் (Iron Age) சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் காலகட்டத்தில், அப்பகுதி மனிதக் குடியேற்றப் பகுதியாக இருந்துள்ளது.
இதுவரை எட்டு மனித எலும்புக்கூடுகள், தங்க-வெண்கல ஆபரணங்கள் மற்றும் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், அக்கால சமூகத்தின் உயரடுக்கு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் சடங்கு முறைப் புதைக்கும் வழக்கத்தைக் குறிப்பதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
அங்குள்ள நான்காவது எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று சாதாரண தங்க வளையமாகவும், மற்றொன்று பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த 'சார்' ஆய்வுக் குழுவின் கல்வெட்டு ஆய்வாளர் ரஞ்சித் குமார் மற்றும் தாய்லாந்து தொல்லியலாளர்கள் இந்த எழுத்துக்களை ஆய்வு செய்ததில், அது ‘புசரகிதாஸ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தனர். இதற்கு "பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்" என்று பொருளாகும். இந்திய வானவியலில் மிகவும் அதிர்ஷ்டமான நட்சத்திரங்களில் ஒன்றான பூசத்தை இது குறிக்கிறது.
தமிழறிஞர்களின் கூற்றுப்படி, இந்த மோதிரம் மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காக எழுத்துக்கள் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைகீழ் எழுத்துக்களை ஆய்வு செய்ததில், அது ‘அளர் வைரதன்’ எனும் தமிழ்ப் பெயரைக் குறிப்பதாக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார். 'அளர்' என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்லாகும்.
தாய்லாந்து தொல்லியல் துறையின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வைசிய வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் இதுபோன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும், முத்திரைகளும் கிடைத்துள்ள நிலையில், இந்தப் புதிய தங்க மோதிரக் கண்டுபிடிப்பு, கி.பி. இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட அனைத்து ஆபரணங்களும் தாய்லாந்தின் ராட்சபுரி மாகாணத்தில் உள்ள 'ப்ரா நகோன் கிரி' தேசிய அருங்காட்சியகத்திற்குப் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆய்வுகளுக்காக மாற்றப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்காக இந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தாய்லாந்து தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
