பஞ்சாப் அணியின் படுதோல்விக்கு காரணமே இதுதான்.. ஆர்சிபிக்கு அடித்த ஜாக்பாட்.. நடந்தது என்ன?

முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது. 

பஞ்சாப் அணியின் படுதோல்விக்கு காரணமே இதுதான்.. ஆர்சிபிக்கு அடித்த ஜாக்பாட்.. நடந்தது என்ன?

2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 60 பந்துகள் மீதமிருந்த நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 14.1 ஓவர்களில் வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலைக்கு காரணம் டாஸ் தான் என்பதுடன், அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பக்கம் அதிர்ஷ்டம் இருந்ததால் போட்டியின் நிலைமையே மாறியது.

முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது. 

இந்த போட்டியில், இந்த மைதானத்தில் முதலில் பந்துவீசுவது சாதகமான சூழ்நிலையாகக் கருதப்பட்டது. ஏனெனில், இந்த மைதானத்தில் பிட்ச் எப்படி செயல்படும் என்பது ஊகிக்க முடியாததாக இருந்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி என்னென்ன தவறுகள் செய்கிறது, பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி சுதாரிப்பாக ஆடலாம். 

ஆனால், இங்குதான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீழ்ச்சி ஆரம்பித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்றது. எதிர்பார்த்தது போலவே, அந்த அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதுதான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் பின்னடைவாக அமைந்தது. அடுத்து, பேட்டிங் இறங்கிய அந்த அணி அதிரடியாக ஆட வேண்டும் என்ற முயற்சியைக் கையில் எடுத்தது.

முதல் மூன்று விக்கெட்டுகள் 30 ரன்களுக்குப் போன நிலையிலும், அடுத்து வந்த பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடவே முயற்சித்தார்கள்; தங்கள் விக்கெட்டுகள் பறிபோவதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. இது இரண்டாவது பெரிய தவறாக அமைந்தது.

முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்த உடனேயே பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் பேட்டிங் வியூகத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும். 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்து ஆடியதற்கு பதிலாக, 160 ரன்கள் ஆவது எடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

ஆனால், வரிசையாக விக்கெட்களை இழந்து 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 26 ரன்களும், பிரப்சிம்ரன் மற்றும் அஸ்மதுல்லா தலா 18 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி கவுரவமாக 100 ரன்களை கடக்க உதவினர். 

102 ரன்கள் என்ற இலக்கை பெங்களூரு அணி 10 ஓவர்களில் எட்டியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.