ஒருநாள் தொடர் – ரோஹித் பங்கேற்பில் சந்தேகம்; இந்திய பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள்!
2027 உலகக் கோப்பைக்கான அடித்தளமாக, ஜூன் 14 முதல் 20 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தர்மசாலா, லக்னோ, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள இத்தொடரில், பல எதிர்காலம் சார்ந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
கேப்டன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராகத் தொடர, விராட் கோலி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். எனினும், ரோஹித் ஷர்மாவின் பெயர் அணியில் இருந்தாலும், அவரது உடல்தகுதி இறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் களமிறங்குவார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026-ல் தொடைத் தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்ட ரோஹித், மும்பை அணிக்காக விளையாடத் திரும்பினாலும், நீண்டகால உடற்தகுதி குறித்த சந்தேகம் தேர்வாளர்களிடையே நிலவுகிறது.
இதனால் ரோஹித் முழுத் தொடரையும் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது. இதேபோல, ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த இஷான் கிஷனுக்கு ரோஹித்துக்குப் பதிலாக தொடக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
நடுத்தர வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பிடிக்க, ஆல் ரவுண்டர்கள் மீதான தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் நம்பிக்கைக்கு ஏற்ப நித்தீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் முதன்மை வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா வேகத்தையும், குல்தீப் யாதவ் சுழலையும் தூக்கிப் பிடிக்க, ஐபிஎல் பார்மில் பின் தங்கிய மற்ற பந்துவீச்சாளர்களுக்குப் பதிலாக ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா / இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நித்தீஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
