தோனிக்கு பதில் 'இம்பேக்ட் பிளேயர்' யார்? சிஎஸ்கே வசம் உள்ள 3 முக்கிய தேர்வுகள்!
ஐபிஎல் 2026 தொடர் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மகேந்திர சிங் தோனிக்கு ஏற்பட்டுள்ள கெண்டைக்கால் காயம் ரசிகர்களைப் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது 44-வது வயதில் கடைசி சீசனாக இதைக் கருதி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனி, முதல் இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் துரதிர்ஷ்டவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி ஒரு விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல், போட்டியின் இக்கட்டான சூழலில் 'இம்பேக்ட் பிளேயராக' வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். தற்போது அவர் இல்லாத சூழலில், அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது.
அணியில் ஏற்கனவே நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இருப்பதால், விக்கெட் கீப்பிங் பொறுப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், பேட்டிங்கில் தோனிக்குப் பதிலாக அதிரடி காட்டக்கூடிய ஒரு வீரரைத் தேர்வு செய்வதில் சிஎஸ்கே கவனம் செலுத்தி வருகிறது.
இதில் முதல் ஆப்ஷனாகப் பார்க்கப்படுபவர் உர்வில் பட்டேல். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி, தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தவர் இவர். பவர்-பிளே (Powerplay) ஓவர்களிலோ அல்லது கடைசி நேரத்திலோ அதிரடியாக ரன்களைக் குவிக்க இவரால் முடியும் என்பதால், இம்பேக்ட் பிளேயர் வரிசையில் இவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
உர்வில் பட்டேலுக்கு அடுத்தபடியாக, உள்நாட்டுப் போட்டிகளில் ரன் மெஷினாகத் திகழும் சர்பராஸ் கான் சிஎஸ்கேவின் லிஸ்டில் இருக்கிறார். சுழற்பந்து வீச்சை நேர்த்தியாகக் கையாளும் திறன் கொண்ட சர்பராஸ் கான், நடுவரிசையில் அணியைப் பலப்படுத்த சிறந்த தேர்வாக இருப்பார். இவர்களுடன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவும் போட்டியில் உள்ளார்.
தோனி இல்லாத இரண்டு வாரங்களில், எதிரணியின் பந்துவீச்சு மற்றும் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து இந்த மூன்று வீரர்களில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராகப் பயன்படுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திட்டமிட்டுள்ளார். இந்த இளம் வீரர்களில் யார் தோனியின் இடத்தை ஓரளவுக்காவது நிரப்புவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
