கொழும்பு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு? வெளியான தகவல்!

Key Points
  • கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு? வெளியான தகவல்!

கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடும் யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களம் முன்வைத்துள்ளது.

இதன்படி, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று தரங்களில் உள்ள வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பாடசாலையில் தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் அனைத்து வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக பிங்க் ஐ என அழைக்கப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் என இதளை கொழும்பு மாநகர சபை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு மற்றும் பொரளை பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது.

இந்த நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளான கண்கள் சிவத்தல், அரிப்பு, அதிகப்படியான கண்ணீர், தலைவலி, ஒளியின் உணர்திறன் மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை குழந்தைகளில் தென்பட ஆரம்பித்தால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றோர்கள் முன்னெடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஐந்து நாட்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், பெற்றோர்கள் உடனடியாக ஒரு கண் மருத்துவரிடம் மருத்துவ கவனிப்பை பெற வேண்டும்.

தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பது போன்ற நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google