‘உள்ளூர் தொடர்களில் ஆட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு: விராட் கோலி மறுப்பு, ரோஹித் சர்மா சம்மதம் – பிசிசிஐ மீட்டிங்கில் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக இருக்கிறார்கள்.

‘உள்ளூர் தொடர்களில் ஆட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு: விராட் கோலி மறுப்பு, ரோஹித் சர்மா சம்மதம் – பிசிசிஐ மீட்டிங்கில் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவதால், தொடர்ச்சியாக விளையாட முடியாமல் இருக்கிறது. உதாரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் விளையாடியப் பிறகு, கடந்த அக்டோபரில்தான் இவர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடினர். இத்தகைய நீண்ட இடைவெளிகள் காரணமாக, இவர்களுக்கு உடற்தகுதி (பிட்னஸ்) சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகக் கூறியிருந்தாலும், அடிக்கடி விளையாட முடியாத நிலை தொடர்ந்தால், பிட்னஸில் பிரச்சினை ஏற்பட்டு, ஃபார்ம் அவுட் ஆக வாய்ப்புள்ளது. 2027 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் பிட்னஸ் குறைபாடுகள் ஏற்பட்டால், அது அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என பிசிசிஐ மீட்டிங்கில் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர்.

அப்போது பேசிய கௌதம் கம்பீர், "விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் தரமான வீரர்கள்தான். இருப்பினும், இவர்கள் அடிக்கடி விளையாடினால் மட்டுமே பிட்னஸை தக்கவைக்க முடியும்" எனக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவர்கள் உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே, இந்திய ஒருநாள் அணியிலும் அவர்களுக்கு ரெகுலராக இடம் கொடுக்க வேண்டும் என்றும் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் நிச்சயம் விளையாட வேண்டும் என்ற விதிமுறை கடந்த வருடமே பிசிசிஐயால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை கோலிக்கும் ரோஹித்திற்கும் அமல்படுத்த வேண்டும் எனவும் கம்பீர் கோரியுள்ளார். இருவரும் நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், 35 வயதைக் கடந்துவிட்டதால், தொடர்ச்சியாக விளையாடுவதன் மூலமே பிட்னஸை தக்கவைக்க முடியும் என்றும் இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா சம்மதம்; கோலியின் மறுப்பு

இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. பிசிசிஐ மீட்டிங்கில் காணொலிக் காட்சியில் கலந்துகொண்ட இருவரிடமும் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அப்போது, ரோஹித் சர்மா பிசிசிஐயின் முடிவை ஏற்றுக்கொண்டு, உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் உடனடியாக மும்பை கிரிக்கெட் வாரியத்தைத் தொடர்புகொண்டு தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டாராம். வரும் நவம்பர் 26ஆம் தேதிமுதல் துவங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பதை உறுதி செய்துவிட்டதாகவும், விரைவில் மும்பை அணியில் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், விராட் கோலி பிசிசிஐயின் இந்த முடிவை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. தான் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், பிட்னஸுக்கு தனிக் கவனம் செலுத்துவதாகவும் அவர் பிசிசிஐ மீட்டிங்கில் தெரிவித்துள்ளார். மேலும், தான் லண்டனில் இருப்பதால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்க முடியாது என்றும் கோலி கூறியுள்ளார்.

எனினும், பிசிசிஐ நிர்வாகிகள், கோலியிடம் உள்ளூர் தொடர்களில் உறுதியாகப் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க விராட் கோலிக்கு ஒரு வாரம் வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாம்.