போர் முடிவடையாமல் நீடிப்பதற்கான உண்மை இதுதான்; ட்ரம்ப் கூறிய காரணம் என்ன?

இந்த நீண்ட போருக்கு முடிவுகாணும் நோக்கில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

போர் முடிவடையாமல் நீடிப்பதற்கான உண்மை இதுதான்; ட்ரம்ப் கூறிய காரணம் என்ன?

நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதற்கான முயற்சிகளை எதிர்த்து, ரஷ்யா 2022 பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. ஆரம்பத்தில் குறுகிய காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நீண்ட போருக்கு முடிவுகாணும் நோக்கில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் நிலப்பரப்புகளில் சுமார் 20 சதவீதம், குறிப்பாக டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளை திரும்ப வழங்குவது தொடர்பாக இன்னும் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னும் ஒருவரை ஒருவர் கடுமையாக வெறுக்கிறார்கள். இதுவே பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்காமல் இருப்பதற்கான முக்கிய காரணம்” என வெளிப்படையாக தெரிவித்தார். அதே நேரத்தில், விரைவில் ஒரு சமரசமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், சமீபத்தில் தான் அதிபர் புதினுடன் பேசியதாக கூறிய ட்ரம்ப், கடும் குளிர் நிலவும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வார காலத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு புதின் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இதற்கிடையில், பேச்சுவார்த்தையை மேலும் முன்னெடுக்க மாஸ்கோக்கு வருமாறு ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பு, போர் முடிவுக்கு வருவதற்கான புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.