பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்... விரக்தியில் சல்மான் அலி ஆகா.. நடந்தது என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், தோல்வியின் விரக்தியைத் தாங்க முடியாத பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா (Salman Ali Agha), இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையான செக்கை (Cheque) தூக்கி எறிந்த சம்பவம், பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதின—குரூப் சுற்று, சூப்பர் 4 சுற்று, மற்றும் இறுதிப் போட்டி. இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதில் இறுதிப் போட்டி மட்டுமே கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்றது. மற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்ததே கேப்டன் சல்மான் அலி அகாவின் விரக்திக்குக் காரணமாக இருந்தது.
போட்டி முடிந்த பிறகு, சல்மான் அலி அகாவின் முகத்தில் தோல்வியின் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து அந்தப் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்ட சில நொடிகளிலேயே, தனது விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக, அந்தச் செக்கை அவர் அங்கேயே தூக்கி எறிந்தார். அவரது இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பரிசளிப்பு விழாவில் தோல்வி குறித்துப் பேசிய சல்மான் அலி அகா, இந்தத் தோல்வியைத் "ஜீரணிப்பது மிகவும் கடினம்" என்று தெரிவித்தார். "பேட்டிங்கில் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. எங்களது பந்துவீச்சு அபாரமாக இருந்தது, ஆனால் பேட்டிங் ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடித்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும். இருப்பினும், என் அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸைப் பொறுத்தவரை, ஃபக்கர் ஜமான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஜோடி பாகிஸ்தானுக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தது. ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் அணி மிக வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குல்தீப் யாதவ் தலைமையிலான இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள், மிடில் ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், வெறும் 33 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, துவக்கத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4 ஓவர்களுக்குள் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
சாம்சனின் விக்கெட்டுக்குப் பிறகு, திலக் வர்மாவுடன் இணைந்த சிவம் துபே, தேவையான நேரங்களில் சிக்ஸர்களை விளாசி, வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். இறுதி வரை நிதானமாக ஆடிய திலக் வர்மா, ரிங்கு சிங்குடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
