இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பலதுறை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பும் விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட வரலாறு, கலாசாரம் மற்றும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், "அக்கம் பக்கத்திற்கு முன்னுரிமை" (Neighbourhood First Policy) கொள்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை சி. பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் வலியுறுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

குறிப்பாக, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அமல்படுத்தப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக, சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.
மேலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நுவரெலியா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்தியாவின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடியிருப்புகளை பார்வையிடுவதோடு, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடவுள்ளார். அத்துடன், சீதா அம்மன் கோவிலுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயம், இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுவதுடன், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் உறவுகளில் புதிய முன்னேற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
