பாபா வாங்கா கணிப்பில் உலக முடிவு: மனிதகுல அழிவிற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது தெரியுமா?

பாபா வாங்கா கணிப்பில் உலக முடிவு: மனிதகுல அழிவிற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது தெரியுமா?

‘பால்கன்ஸ் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றில் நடந்த பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறார். அவரது கணிப்புகள் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாதவையாக இருந்தாலும், உலகம் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதும், ஒவ்வொரு புதிய ஆண்டும் தொடங்கும் போதும் அவரது தீர்க்கதரிசனங்கள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வருகின்றன.

அந்த வகையில், தற்போது பாபா வாங்காவின் ஒரு பழைய கணிப்பு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதில் மனிதகுலத்தின் இறுதி அழிவு எந்த ஆண்டில் நிகழும் என்பதற்கே அவர் குறிப்பிட்ட தேதி ஒன்றை சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கணிப்பின் படி, உலகின் முடிவு 5079 ஆம் ஆண்டில் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிலான ஒரு பிரபஞ்ச சம்பவம் நிகழ்ந்து, மனித நாகரிகத்திற்கும், முழு அண்டத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என அவர் கணித்ததாக கூறப்படுகிறது.

பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், போர்கள் மற்றும் இறுதிக்கட்ட அழிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்ட கால வரிசையாக அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் விளக்குகின்றனர். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் போர், சந்திரனுடன் தொடர்புடைய பேரழிவு, அதன் பின்னர் பூமியில் உயிரினங்களின் அழிவு போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் அந்த கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த அழிவிற்கு முன் மனிதகுலம் ஒரு உச்ச வளர்ச்சிக் கட்டத்தை அடையும் என்றும் பாபா வாங்கா கூறியதாக தகவல்கள் உள்ளன. 4300-களுக்குள் தொழில்நுட்பமும் ஆன்மீகமும் உச்ச நிலையை எட்டும் என்றும், அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணப்படும் என்றும் கூறப்படுகிறது. 4674 ஆம் ஆண்டில் நாகரிகம் தனது உச்சத்தை எட்டி, பல கோள்களில் கோடிக்கணக்கான மக்கள் வாழும் சூழ்நிலை உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் காலங்களில், மனிதர்கள் பிரபஞ்சத்தின் எல்லையை கண்டறிந்து, அதற்கு அப்பால் பயணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை தீவிரமாக விவாதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவாதங்களின் முடிவாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பேரழிவினாலோ, 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் முடிவுகட்டும் சூழ்நிலை உருவாகும் என அந்த கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாபா வாங்கா தனது கணிப்புகளை எழுத்துப்பூர்வமாக எங்கும் பதிவு செய்து வைக்கவில்லை. அவரது மருமகள் கிராசிமிரா ஸ்டோயனோவா மற்றும் அவரது மரணத்திற்குப் பிறகு கணிப்புகளை தொகுத்த சீடர்கள் வாயிலாகவே இத்தகவல்கள் பரவியுள்ளன. உலக அழிவு மட்டுமல்லாமல், 2026 ஆம் ஆண்டைச் சுற்றியும் சில ஆபத்தான நிகழ்வுகளை அவர் கணித்ததாக கூறப்படுகிறது.

அதில் முக்கியமாக, மூன்றாம் உலகப் போர் குறித்து அவர் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளுக்கிடையே அதிகரிக்கும் அரசியல் பதற்றம், முக்கிய நாடுகளின் நேரடி மோதல் போன்றவை ஒரு பெரும் போராக மாறக்கூடும் என கூறப்படுகிறது. இதேபோல், பல தீவிரமான இயற்கைப் பேரழிவுகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களும் அந்த காலகட்டத்தில் நிகழலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் உருவாகலாம் என்ற பரபரப்பான கருத்தும் பேசப்படுகிறது.

இந்த தகவல்கள் பாபா வாங்காவைச் சுற்றி இணையத்தில் பரவும் கணிப்புகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இவை அறிவியல் ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்டவை அல்ல. தகவல் நோக்கத்திற்காக மட்டுமே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.