ஜாம்பவான் மரணம்.. கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய இலங்கை வீரர்கள்..

Key Points
  • ஜாம்பவான் ஒருவர் மறைந்ததை ஒட்டி அவர் நினைவாக இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.
  • ஆனால், அந்த ஜாம்பவான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.
  • ஒரு கிரிக்கெட் ரசிகர்.
ஜாம்பவான் மரணம்.. கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய இலங்கை வீரர்கள்..

இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அதற்கான காரணம், சற்று வித்தியாசமானது. 

ஜாம்பவான் ஒருவர் மறைந்ததை ஒட்டி அவர் நினைவாக இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். ஆனால், அந்த ஜாம்பவான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகர்.

ஆம், "அங்கிள் பெர்சி" என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்ட பெர்சி அபேசேகர மறைவுக்கு தான் இலங்கை வீரர்கள் இவ்வாறு மரியாதை செய்துள்ளனர். யார் அந்த அங்கிள் பெர்சி?

1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி கோப்பை வென்ற போது தான் அங்கிள் பெர்சி முதன்முதலாக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்கும் அறிமுகம் ஆனார். ஆனால், அதற்கு முன்பு இருந்தே இலங்கை கிரிக்கெட் அணியின் மீது பெரும் அன்பு கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் அவர்களை ஆதரித்து வந்தார் பெர்சி.

1996 உலகக்கோப்பை தொடரில் அவர் வெறும் ரசிகராக மட்டும் இல்லாமல், அணியில் ஒருவராக இருந்து, வீரர்களின் அறைக்கு இயல்பாக சென்று வரும் நபராக இருந்தார். 

வீரர்களை தொடர்ந்து உற்சாகமூட்டினார். அந்த உலகக்கோப்பை தொடரை இலங்கை அணி வென்றது. அப்போது வீரர்கள் மட்டுமின்றி, அங்கிள் பெர்சியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார்.

அவர் தனது 87வது வயதில் மறைந்தது ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் நினைவாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.

அவரது மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அமைப்பு, "அபேசேகர இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அப்பால் இருந்து வீரர்களை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றினார். 

இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில், அவர் அளித்த ஊக்கம் அளப்பரியது. கிரிக்கெட் பிரியர்களிடையே அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்." என கூறி உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google