விராட் கோலி கத்திக் கொண்டாட்டம்: உணர்ச்சியா, ஆக்ரோஷமா? – ரசிகர்கள் கேள்வி

விராட் கோலி கத்திக் கொண்டாட்டம்: உணர்ச்சியா, ஆக்ரோஷமா? – ரசிகர்கள் கேள்வி

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 155 ரன்களில் சுருண்ட நிலையில், எதிரணியான குஜராத் டைட்டன்ஸ் தலைவர் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, முன்னாள் RCB கேப்டன் விராட் கோலி கத்திக் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 'இவ்வளவு ஆக்ரோஷம் தேவையா?' என்ற கேள்விக்கு மத்தியில், இந்தச் சம்பவத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன், மூன்று ஓவர்களில் 42 ரன்களை விளாசி அதிரடியாகத் தொடங்கினர். கில் குறிப்பாக, ஜோஷ் ஹேசில்வுட்டின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளை விளாசி, தனது ஆட்டத் திறமையை வெளிப்படுத்தினார்.

ஆனால், RCB வீரர் புவனேஷ்வர் குமாரின் லெங்த் டெலிவரியில் கில் கவர் பகுதியில் பந்தை அடிக்க முயன்றபோது, கோலி அந்தப் பந்தை அபாரமான கேட்ச் மூலம் பிடித்து, கில்லை 43 ரன்களில் வெளியேற்றினார். கில் அவுட்டானதும், பந்தைத் தரையில் அடித்து, உரத்த குரலில் கத்தி, கழுத்து நரம்புகள் புடைக்கத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

இதற்கு முக்கிய காரணம், அதற்கு சற்றுமுன் நடந்த நிகழ்வாக இருக்கலாம். முதல் ஓவரிலேயே ககிசோ ரபாடாவின் ஓவரில் கோலி தொடர்ந்து ஐந்து பவுண்டரிகளை விளாசி 21 ரன்கள் எடுத்தார். அந்த அதிரடியில் இருந்த கோலி, அதே ரபாடாவின்.. பந்தில் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அந்த வெறுப்பு, பின்னர் தனது எதிரணி கேப்டனின் (கில்) விக்கெட்டை வீழ்த்தியபோது உணர்ச்சியாக வெளிப்பட்டிருக்கலாம்.

மேலும், கில்லின் விக்கெட் மட்டுமின்றி, அதற்கு முன்னதாக ரஜத் பட்டிதார் கேட்ச் விவகாரத்தில் நடுவரின் முடிவு கோலிக்கு உறுத்தலாக இருந்தது. இந்தக் கோபமும் இந்தக் கொண்டாட்டத்தில் எதிரொலித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சுப்மன் கில், விராட் கோலியைவிட ஜூனியர் வீரர் என்பதாலும், அவரது விக்கெட்டைப் பெற்ற பின்னர் மிகையாகக் கூச்சலிட்டதாகவும் பல ரசிகர்கள் கண்டித்துள்ளனர். "இது தேவையற்ற ஆக்ரோஷம்", "ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டுக்கு மாறானது" என சிலரும், "மைதானத்தில் உணர்ச்சிகள் தானாக வெளிப்படும்", "இது தான் விராட் கோலியின் ஸ்டைல்" என அவரை ஆதரிப்பவர்களும் உள்ளனர்.

விராட் கோலி எப்போதுமே இதயத்தில் கையை வைத்து, உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டும் வீரர். அவரது ஆக்ரோஷமே களத்தில் அவரை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், கில்லின் விக்கெட் என்பது ஒரு சூழ்நிலை. குறிப்பிட்ட அணியின் மீதான பகை அல்ல. அந்த நிமிட உணர்ச்சி தன்னை மறந்து செயல்பட வைத்திருக்கலாம். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில், இளம் ரசிகர்கள் பின் தொடரும் ஒரு ஐகானாக, சற்றே கட்டுப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது சிறந்த விளையாட்டு உணர்வுக்கு உதவுமா என்பது விவாதத்திற்குரிய விஷயமே.