ஈராகில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து – 4 வீரர்கள் உயிரிழப்பு, தாக்குதல் சந்தேகம்

ஈராக் வான்பரப்பில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஒரு ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

ஈராகில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து – 4 வீரர்கள் உயிரிழப்பு, தாக்குதல் சந்தேகம்

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றத்தின் மத்தியில், ஈராக் வான்பரப்பில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணையை தொடங்கியுள்ளது.

விபத்துக்குள்ளானது அமெரிக்காவின் KC-135 வகை ராணுவ விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பொதுவாக போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளில் இந்த விமானம் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் இலக்குகளை தாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஈராகில் செயல்படும் Islamic Resistance in Iraq என்ற அமைப்பு இந்த அமெரிக்க விமானத்தை தாங்களே சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. எனினும் இந்தக் கூற்றை அமெரிக்க ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.