உலகம்

சென்னை பொலிஸார் அதிரடி: இலங்கை யுவதி கொலையில் 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் கார் மோதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பொலிஸார் அதிரடி: இலங்கை யுவதி கொலையில் 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். தோழியைப் பார்ப்பதற்காகச் சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்ற நிலையில், அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருபக்கத்தினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர்.

தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பினர் காரை வேகமாக மோதச் செய்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகக் கோயம்பேடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விபத்தை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கொடி கட்டப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த கேளிக்கை விடுதிக்கு முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஐரோப்பாவில் எரிமலை சீற்றம்: விமான நிலையம் மூடல் – 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; இந்திய குடும்பங்கள் சிக்கல்!

கொழும்புதமிழ் WhatsApp சேனலில் இணையுங்கள்

உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்த செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.

எங்கள் நெட்வொர்க்:
ahafm malaioli seithi news21 colombotamil cinema